அத்தி வரதர் ....
40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்' ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்... இது ஒரு செய்தி தான்.. வரலாறு தெரிய வேண்டாமா .... இதோ சில குறிப்புகள் ...
வரதராஜப் பெருமாளை உருவமாக கண்டு பிரம்மித்த பிரம்மன், அதே உருவத்தை அத்தி மரத்தில் உருவாக்கி பிரதிஷ்டை செய்து பூஜித்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்ளாத நாளே இல்லை. அந்த மன சந்தோஷத்தின் பால் மீண்டும் சத்திய விரத க்ஷேத்திரம்(காஞ்சிபுரம்) வந்தார் பிரம்மன். அத்தி வரதர் முன் தன் மனநிறைவின் காரணமாக யாகம் ஒன்றை செய்தார்.அந்த யாகத்தில் உருவான தீச்சுடர், அத்தி வரதப் பெருமாளின் மேல் பட்டுவிட்டது. அதைக் கண்டு அதிர்ந்து போனார் பிரம்மா. 'வரதா! உனது கருணையால் எனது யாகசாலையில் அக்னிக்கு நடுவே தோன்றிக் காட்சியளித்து எனக்கு அருள்புரிந்தாய். ஆனால் இன்று எனது கவனக் குறைவால் உன் திருமேனி இப்படி ஆகிவிட்டதே!' என்று வருந்தினார்.
அப்போது பிரம்மாவிடம் அத்தி வரதர், 'பிரம்மா! திருமேனியில் (பின்னப்பட்டு) குறைவு கொண்டு விக்கிரஹமாக இவ்விடம் நின்றருள்வது நன்றன்று. மேலும் யாகத்தீயால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக் கொள்ள கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள அனந்தஸரஸ் என்னும் பொய்கைக்குள் இருக்கும் நீராழி மண்டபத்துக்குத் தெற்கே விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் ஒன்று உள்ளது. அந்த நாலுகால் மண்டபத்துக்குள் என்னை வைத்துவிடு. அந்தப் பொய்கைக்குள்ளே நான் இளைப்பாறுகிறேன்!' என்று கூறினார்.
அத்தி வரதரின் ஆணையை ஏற்ற பிரம்மா, அத்தி வரதரை ஒரு வெள்ளிப்பேழையில் வைத்து, அனந்த சரஸ் பொய்கையிலுள்ள அந்த நாலுகால் மண்டபத்துக்குள்ளே எழுந்தருளப் பண்ணினார். அத்தி வரதர் அவ்விடம் வாசம் கொள்வதால் எந்தக் காலத்திலும் அந்தப் பொய்கையிலுள்ள நீர் வற்றியதே இல்லை.
வரதராஜப் பெருமாள் கோயில் இப்போது இருக்குமிடம் முன்னர் அத்திமரங்கள் சூழ்ந்த யானை வடிவான மலையாக இருந்தது. இதனால் அத்தி மரங்கள் சூழ்ந்த மலை(கிரி) என்பதால் இத்தலம் அத்திகிரி என்றழைக்கப்பட்டது. இதன் காரணமாக இவ்விடம் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு அத்திகிரி வரதராஜர் என்ற நாமம் உருவானது. அதுவே அத்தி வரதர் என சுருங்கலாயிற்று.
இவ்வாறு அனந்த சரஸ்ஸுக்குள் சென்ற அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தான் வெளியே வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதாக பிரம்மாவுக்கு வாக்களித்தார். அதன்படி நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வரும் அத்தி வரதர், 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருப்பார். 24 நாட்கள் சயனத்திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார். 48 நாட்களுக்குப் பின் மீண்டும் அனந்த சரஸ் பொய்கைக்குள்ளே சென்றுவிடுவார்.
முன்பு அறுபது ஆண்டுக்கு ஒரு முறை வசந்த மண்டபத்தில் காட்சி அளித்த அத்தி வரதர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நாற்பது ஆண்டுக்கு ஒரு முறை வசந்த மண்டபத்தில் காட்சி தருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு அதாவது 2.7.1979லும் அதற்கு முன்பு 12.7.1939-ஆம் ஆண்டிலும் அதற்கும் முன்பு 13.6.1899-லிலும், 18.8.1859-லிலும் அத்தி வரதரை நீரிலிருந்து வெளியே எழுந்தருளச் செய்து, பொதுமக்களின் தரிசனத்திற்காக 48 நாட்கள் விசேஷ பூஜைகளுக்குப் பிறகு மீண்டும் தண்ணீருக்குள்ளேயே திரும்ப எழுந்தருளச் செய்யப்பட்டார்.
தற்போது ஜூலை 1, 2019ல் காட்சி கொடுக்க உள்ளார். 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருப்பார். 24 நாட்கள் சயனத்திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார்.
நாரணனன் நாமம் வாழ்க ......
No comments:
Post a Comment